அதிகபட்சமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரும்பப் பெற்ற பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய ஆறு மாநிலங்களின் 116 மாவட்டங்களில் 125 நாட்களில் 'ஏழைகள் நலன் மற்றும் வேலைவாய்ப்பு திட்டம்' ஒரு முன்னோட்டமாக/ சோதனை திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. கொரோனா நெருக்கடியினால் தொழில்கள் முடங்கியதில் வேலையிழந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் ரூ .50,000 கோடி நிதியுடன் இந்த வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை துவங்கி வைத்தப்போது பாரத் பிரதமர் மோடி கூறியதாவது, ”நாடு தழுவிய இந்த முடக்கதினால் (Lockdown), நகரங்களில் இருந்து திறமைகள் கிராமங்களுக்குத் திரும்பியுள்ளது, இது இப்போது கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகின்றேன்” என்றார். இந்த திட்டம் பொது உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்த உதவும். இதில் 25 பணிகள் அடங்கும், குறிப்பாக ஏழைகளுக்கான கிராமப்புற வீட்டுவசதி, தோட்டங்கள், ஜல் ஜீவன் மிஷன் மூலம் குடிநீர் வழங்குதல்...